கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Sunday, July 28, 2013

மண்பாசம் நூல்குறித்து



உங்கள் எழுத்து முதன் முதலில் எனக்கு அறிமுகம் ஆனது "மறைவாய் சொன்ன கதைகள்" மூலம் தான். அதற்கு முன்பு நான் "கி.ரா"வின் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" படித்திருக்கிறேன்.

அதன் பின்பு உங்கள் நூல் ஏதும் படிக்க கிடைக்கவில்லை. சென்ற வாரம் நூலகத்தில் உங்கள் "மண்பாசம்" புத்தகம் கிடைத்தது. கொண்டு வந்து படிக்க படிக்க மனசு பாரமாகி கொண்டே சென்றது. ஒவ்வொரு கட்டுரையும் மிக அருமையாகவும் நாம் கண்முன்னே இழந்து விட்ட மரபுகளின் வலியாகவும் இருந்தது. எனக்கு சிலசமயங்களில் எங்கள் கிராமத்தில் நடைபெறும் சடங்கு சம்ப்ரதாயங்களை பார்க்கும் பொது ஏதோ முட்டாள்தனமாக தோன்றியது உண்டு. அனால் உங்கள் நூலை படித்த போது அவையெல்லாம் இந்த எளிய மக்களின் மகத்தான நம்பிக்கை என்று புரிந்தது, இந்த எளிய கிராமத்து மக்கள் பேசும் வட்டார மொழியை பண்டிதர்கள் என்னும் படித்தவர்கள் கேலி செய்கிறார்கள் என்றும் கூறி இருப்பது மிகவும் உண்மையான கூற்று, இன்னும் நாம் அவர்களை (நானும் கூட) புரிந்து கொள்ளாமல் ஒதுக்கியே வைத்து இருக்கிறோம்.

அனால் அவர்களின் சொல்லாடல் கலைநயம் மிக்கதாகவும் பொருள்பொதிந்தும் இருப்பது உங்கள் நூலை படித்த பின்பே உரைத்தது.

"நொண்டி ஆட்டின் நன்றி" கட்டுரையில் தன்  எஜமானர் தன்னை எப்போதும் மேச்சலுக்கு தோளில் தூக்கிகொண்டு சென்றதை நன்றி மறக்காமல், நீண்ட காலத்துக்கு பிறகு திரும்பி வந்து அவருக்கு உதவும் அந்த ஆட்டின் நன்றி எத்தகைய மேன்மையானது. அத்தகைய நன்றி உணர்வு இன்றைய மக்களுக்கு இருந்தால் இவ்வுலகில் ஏது துன்பம்?

காதலன், காதலியின் சாமர்த்தியமான புதிர்கள் ரசிக்கும் வண்ணம் மிக அருமையாக இருந்தது.புதிர் போட்டு அதை விடுவிக்கும்  ஆணையே திருமணம் முடிக்கும் பெண்ணின் நுட்பம் வியக்க வைக்கிறது.

செல்வம் எப்போதும் நிலையல்ல என்பதை "தூண்டில்காரன்" கதை மிக உண்மையாக சொல்கிறது. சிறிய தூண்டில் நூலின் மூலம் அவ்வளவு பெரிய இரும்பு பெட்டியில் கிடைத்த தங்க காசுகள், இறுதியில் அந்த இரும்பு பெட்டியை விற்றால் தான் ஜீவனம் நடத்து முடியும் என்னும் நிலையில் அதை இரும்பு சங்கிலிகள் கொண்ட தராசில் வைக்கும் போது இரும்பு சங்கிலி அறுந்து விழுந்துவிடுவதும். "அன்று ஒரு தூண்டில் நூலின் பலத்தில் கிடைத்த செல்வம், இன்று இரும்பு சங்கிலியை அறுத்து கொண்டு போகிறது" என்று அந்த தூண்டில்காரன் சிரிக்கும் சிரிப்பு, வாழ்க்கை நம்மை பார்த்து சிரிக்கும் நமுட்டு சிரிப்பாகத்தான் எனக்கு தோன்றியது.

"இழப்பு" குறித்த பாடல்கள் இழப்பு தரும் வலியையும் அதனால் ஏற்படும் உரிமை இழப்பையும் பாதுகாப்பினமையும் மிக அருமையாக வெளிப்படுத்தி உள்ளது.

இயற்கையின் படைப்பு குறித்த சந்தேகத்தையும் ஐயத்தையும் "படைப்பின் ரகசியம்" சிறுகதை மிக தெளிவாக கூறுகின்றது

குலுக்கை செய்யும் வேளாரின் வாழ்கை தான் எவ்வளவு இனிமை, இன்று குலுக்கைகளையும் பார்க்கமுடிவதில்லை வேளாரையும் பார்க்கமுடிவதில்லை

வாழ்வினை எதிர்கொள்ளும் போது ஏற்படும் ஏற்படும் சவால்களை பல்வேறு பழமொழிகள் மூலம் கூறும் கலைநயம் வியக்க வைக்கிறது. "வெற்று வாய் வார்த்தைகள்" என்று படித்தவர்கள் இதை ஒதுக்கிவிட கூடாது என்பது மிக உணமையான் அக்கறை.

வசவு மொழியினை கூட நம் மக்கள் மிக லாவகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு, ஒரு தாய் தன மகனை "நாசமத்து போற பயலே" என்று திட்டுவதே போதும்.

முத்துப்பட்டன் என்னும் பிராமணன் அருந்ததியினர் வீட்டு பெண்களின் மீது கொண்ட காதலால், அவர்கள் வீட்டிலே தங்கி மாட்டுக்கறி உண்டு, சாணி சகதிகளை அள்ளி தன காதலை நிரூபித்து அவர்களை மணமுடிப்பது காதலின் மேன்மையை காட்டுகிறது. பின்னர் அவர்கள் மூவரும் ஒரே சிதையில் எரிந்து இறப்பது மனதை துவள செய்கிறது. அனால் ஒரு பிராமணன் அருந்ததி பெண்களை மணமுடிக்கும் முற்போக்கான  இந்த கதையை பல்வேறு "ஒட்டு கதைகளை" சேர்த்து  முத்துபட்டன் ஏன் அருந்ததி பெண்களை மணக்கிறான் என்று ஒரு சாக்கு கூறி தங்கள் சாதியின் அரசியலை காட்டிவிடுகிறார்கள் பிராமணர்கள், இது கொடிய சாதி வன்மமாகவே தெரிகிறது.

வள்ளல் சீதக்காதி குறித்த "வெள்ளிதட்டும் தங்கதட்டும்" கதை அவரின் கொடைவள்ளல் தன்மையை மேலும் அதிகரிப்பதாகவே அமைந்திருப்பது சிறப்பு.

வீட்டிற்கு வரும் மணமகள் குணம் அறிய அவங்கள குத்துவிளக்கு ஏற்ற சொல்லி பார்ப்பதும், சுண்ணாம்பு கொண்டு வரசொல்லி  சோதிப்பதும் ரசிக்கும் வண்ணமாகவும் மதிநுட்பம் மிக்கதாகவும் உள்ளது

யார் ஒருவன் மக்களுக்கு தான தர்மங்கள் நிறைய செய்கிறானோ அவன் கடவுள் நேசிக்கும் மனிதர்களின் பட்டியலில் முதலில் இருப்பான் என்பதை "இரு பட்டியல்கள்" கதை மிக அழகா உணர்த்தியது.

அளவுகோல்களின் வருகைக்கு முன்பு மக்கள் தம் உடல் உறுப்புகளை கொண்டே அளவுகளை வரையறுத்திருப்பது சிறப்பு. குறிப்பாக மழை பெய்த அளவை குறிக்கும் சொற்கள் மிக அருமையாக இருக்கிறது.
 
 வட்டார வழக்கில் தலை, கை, காது, வயிறு, நாக்கு குறித்த பழமொழிகள் வாழ்வின் நிகழ்வுகளோடு மிக கச்சிதமாக பொருந்தி உள்ளன

கர்ணனின் கொடை வள்ளல்லை  குறித்த கதைகள் பிறர்க்கு உதவும் குணத்தை உயர்த்தி காட்டுகிறது. தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்பதை கர்ண மகாராசர் தன்னுடைய மரணத்தை அடையும் நேரத்தில் தெரிந்து கொண்ட கதை அருமை.

"அறுவடையாகும் கிராமிய பண்பாடு" கட்டுரை என்னையும் இந்த சமுதாயத்தையும் நவீன விவசாயத்தையும் குற்ற உணர்ச்சி கொள்ள செய்கிறது.எல்லாமே இயந்திரமயம் ஆகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், அறுவடைக்கு உரிய மரியாதை இல்லை. விதை நெல்லை சேகரிப்பது முதல் அறுவடை செய்யும் காலம் வரை உள்ள செயற்பாடுகள்  வியக்க வைக்கிறது.
"அறுவடை என்பது பந்தம் வளர்க்கும் திருவிழா" என்ற கூற்றை வேறு எந்த வாக்கியத்தை கொண்டும் ஈடு செய்ய முடியாது. அதே போல் " அறுவடை இயந்திரங்கள் நெற்பயிரைய் மட்டும் அறுப்பதில்லை, கிராமத்து பண்பாட்டு வேர்களையும் சேர்த்தே அறுவடை செய்கின்றன" இந்த வரியை படிக்கும் போது மனம் குற்ற உணர்ச்சியால் தவிக்கிறது.

நம் முன்னோர்கள் மரபாக செய்து வந்த "ஊடு பயிர்" முறை இன்று முற்றாக அழிந்து விட்டு இருப்பது கவலை அளிக்கிறது. அவர்கள் தங்கள் அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்த வேளாண் தொழில்நுட்பங்களை நாம் மதித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சொல்ல வேண்டும் என்ற அக்கறை, நிச்சயம் இன்றைக்கு மிக தேவை.

மண்பாசம் கட்டுரையில் அறுவடையை உழவர் திருவிழாவாகவும், விதைப்பை வீட்டு விசேஷமாகவும் கொண்டாடுகிறார் என்பது நெகிழ செய்கிறது. வயலுக்கும் உழவனுக்கும் உள்ள உறவை கணவன் மனைவி ஊடலுக்கு உவமையாக வள்ளுவர் கூறி இருப்பது சிறப்பான பொருத்தம்

இந்த நூலின் ஒவ்வொரு வரியிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது ஐயா.
அன்புடன் - தினேஷ்குமார் 

No comments: